விளக்கு



விளக்கு விருது பெற்றோர்

2024

புனைவிலி இலக்கியம்: பேராசிரியர் கார்லோஸ் சபரிமுத்து (எ) தமிழவன்

விருது பெற்றோர் புகைப்படம்

வாழ்க்கைக் குறிப்பும் இலக்கியப் பணிகளும்
கார்லோஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழவன் அடிப்படையில் தமிழ் பேராசிரியர். திறனாய்வாளர், படைப்பாளர், இதழாளர் என பல தளங்களில் செயற்பட்டவர். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகேயுள்ள மணலிக்கரை என்ற ஊரில் 1945ஆம் ஆண்டு பிறந்தார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படித்த இவர் கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழிலக்கியம் நிறைவு செய்தார். புனித சவேரியார் கல்லூரியிலும், பாலக்காடு சித்தூர் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராக சில காலம் பணியாற்றிவிட்டு பெங்களூர் கிறிஸ்து கல்லூரியிலும் பெங்களூர் பல்கலைக்கழகக் கன்னட ஆய்வு மையத்திலும் பணியாற்றினார். தமிழ், கன்னட நாட்டுப்புறக் கதைகள் பற்றிய ஒப்பாய்வு என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக பணியாற்றித் திரும்பினார். அதன் பிறகு ஆந்திர மாநிலத்தின் குப்பத்திலுள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவர். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். முழுநேர எழுத்துப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

வ. ஐ. சுப்பிரமணியம், ச. வே. சுப்பிரமணியம் ஆகியோர்களிடம் பயின்ற தமிழவன் மரபு இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் ஆர்வமுடையவராக இருந்தார். எண்பதுகளில் இலக்கு என்ற இயக்கத்தை நண்பர்களோடு சேர்ந்து நடத்தியது இவருடைய முக்கியமான பங்களிப்பு. எண்பதுகளில் கலை இலக்கியம், எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும், புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும் போன்ற கருத்தரங்குகள் அதன் சார்பாக நடத்தப்பட்டன. எண்பதுகளில் நடந்த முக்கியமான இலக்கியச் சந்திப்பு மையங்களாக இந்த அரங்குகள் அமைந்தன. தமிழ்க் கோட்பாட்டுச் சிற்றேடுகளில் முக்கியமானதான படிகள் இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தார். தமிழவனின் எழுத்துகள் அதில் தொடர்ந்து இடம் பெற்றன. பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த மேலும் ஆய்விதழின் ஆலோகர் குழுவில் இருந்தார். தொடர்ந்து நாகர்ஜூனன், எஸ்.சண்முகம், நஞ்சுண்டன் உள்ளிட்ட நண்பர்களோடு சேர்ந்து வித்யாசம் என்னும் நவீன கோட்பாட்டு சிற்றிதழையும் நடத்தினார்.

தமிழ் இலக்கியங்களை வாசிப்பதற்கு மரபான திறனாய்வு முறைகள் மட்டுமல்லாது மேற்குலகின் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வாசிக்கும் போக்கும் உருவான போது அத்தகு கோட்பாடுகளைத் தமிழில் அறிமுகப்படுத்தியவராகவும், அவற்றைத் தமிழிலக்கியங்களோடு பொருத்தி விவாதித்தவராகவும் தமிழவனின் இடம் அமைகிறது. அந்தவகையில் அவர் எழுதிய ஸ்டரக்சுரலிசம்(1982), அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும்(1991), தமிழும் குறியியலும்(1992) அமைப்பியலும் அதன்பிறகும்(2019) போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த நூல்களிலுள்ள கோட்பாடுகளும் விவாதங்களும் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ச் சூழலுக்கேற்ப உள்வாங்கப்பட்டு முதன்முறையாக எழுதப்பட்ட கோட்பாட்டு அறிமுக நூல்களாகும். வெளியான காலத்தில் பல்வேறு விவாதங்களுக்கும், புதிய கோட்பாடுகளின் அறிமுகத்திற்கான முன்னுதாரணங்களாகவும் இந்நூல்கள் இருந்தன. கோட்பாட்டு அறிமுகத்தை மட்டுமல்லாமல் அவற்றின் அடிப்படையில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியது மூலம் புதுவிதமாக வாசிப்பதற்கான முறையையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும்(1992, 1995) பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்(2009) தமிழவன் கட்டுரைகள் போன்ற நூல்கள் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை. இக்கோட்பாடுகளின் யோசனை முறைகளை உள்வாங்கியும் விலகியும் நாவல்களையும் சிறுகதைகளையும் கூட அவர் படைத்தளித்திருக்கிறார். அப்படைப்புகளும் வெளியான காலத்தில் கவனத்தை ஈர்த்தன. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், சரித்திரத்தில் படிந்த நிழல்கள், ஜி. கே. எழுதிய மர்ம நாவல் போன்றவை அத்தகைய நாவல்களாகும்.பின்னாட்களில் தமிழ் என்னும் சிந்தனை குறித்து அவர் எழுதி வந்த கட்டுரைகள் தமிழ்ச் சமூகம், வரலாறு, பண்பாடு குறித்த முக்கியமான வாசிப்புகளாக அமைந்தன. இன்றைய தமிழ் என்னும் அடையாளத்தைப் புரிந்து கொள்வதில் அவை முக்கியமான கோட்பாடுகளை அளிக்கின்றன. இவைத்தவிர தொகுப்பு, பதிப்பு, மொழி பெயர்ப்பு என்கிற வகையில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் அவர். அவையும் பின்நவீனத்துவம், கன்னட தலித் இலக்கியம், ஈழத்துக் கவிஞர்கள், பெண் கவிஞர்கள் தொடர்பான நூல்களேயாகும்.

படைப்புகள்
திறனாய்வு மற்றும் கோட்பாட்டு நூல்கள்:
• ஸ்ட்ரக்சுரலிசம்
• அமைப்பியலும் அதன் பிறகும்
• படைப்பும் படைப்பாளியும்
• தமிழும் குறியியலும்
• தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும்
• நவீனத்தமிழ் விமர்சனங்கள்
• புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்
• தமிழுணர்வின் வரைபடம்
• தமிழவன் கட்டுரைகள் |,|| • புதுக் கம்யூனிசம் மற்றும் சில கட்டுரைகள்
• நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
• இருபதாம் நூற்றாண்டில் கவிதை
• திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்
• நானும் சிந்தனையாளர் படைப்பாளி யூலியா கிறிஸ்தோவாவும்
• பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்
நாவல்கள்:
• ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் (1985, 2021)
• சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்
• ஜி.கே. எழுதிய மர்மநாவல்
• முஸல்பனி
• ஆடிப்பாவை போல
• வார்ஸாவில் ஒரு கடவுள்
சிறுகதைத் தொகுப்புகள்:
• இரட்டைச் சொற்கள்
• நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்
• தமிழவன் கதைகள்
• கருஞ்சிவப்பு ஈசல்கள்

புனைவிலக்கியம்: எம்.கோபாலகிருஷ்ணன்

விருது பெற்றோர் புகைப்படம்

வாழ்க்கைக் குறிப்பும் இலக்கியப் பயணமும்
தமிழில் சிறுகதை, நாவல், கவிதை, இதழியல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கி வரும் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன். திருப்பூர் குமரானந்தபுரத்தில் 1966 ஆம் ஆண்டு பிறந்த எம். கோபாலகிருஷ்ணனின் இலக்கியப் பயணம் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து எண்ணங்கள் என்ற கையெழுத்து இதழை தொடங்கி நடத்தியதிலிருந்து ஆரம்பிக்கிறது. பக்தவச்சலமும் சுப்ரபாரதிமணியனும் இணைந்து நடத்திய சூத்ரதாரி இதழ்ப் பணிகளிலும் பங்கேற்றார். திருப்பூரிலிருந்து வெளிவந்த குதிரை வீரன் பயணம் இதழில் எழுதிய போது தான் எம். கோபாலகிருஷ்ணனுக்கு சூத்ரதாரி என்ற புனைப்பெயரை சூட்டினார் யூமாவாசுகி. தொடர்ந்து அவர் எழுதி வந்த சிறுகதைகளின் தொகுப்பாக பிறிதொரு நதிக்கரை என்ற நூல் 2000 ஆம் ஆண்டு வெளியானது. அதற்கு முந்தைய 1999 ஆம் ஆண்டிலிருந்து ஜெயமோகன், செந்தூரம் ஜெகதீஷ் ஆகியோரின் இணைப்பில் சொல்புதிது இதழில் பணியாற்றி அதன் ஆசிரியராகவும் இருந்தார். வணிகவியலிலும், இந்தி இலக்கியத்திலும் பட்டமேற்படிப்பை முடித்த எம்.கோபாலகிருஷ்ணன் காப்பீட்டுத் துறையில் பணியாற்றினார். ஆரம்பத்தில் சூத்திரதாரி என்ற புனைப்பெயரிலேயே எழுதி வந்த அவர் பின்னர் முழுதும் இயற்பெயரிலேயே வெளிப்பட்டார்.அம்மன் நெசவு, மணல்கடிகை, மனைமாட்சி, தீர்த்த யாத்திரை போன்ற கவனம் ஈர்த்த நாவல்களை எழுதினார். தமிழின் கொடுமுடி நாவல்களாக நிலைக்கயிருப்பவற்றுள் இவரின் நாவல்களுக்கும் இடமிருக்கும். தமிழின் முக்கியமான நாவலாசிரியராக விமர்சகர்களாலும் கருதப்படுகிறார். அன்றாடத்தின் நம்பகமான சித்திரங்களைத் துல்லியப்படுத்தும் இவர் படைப்புகள் அதேவேளையில் வாழ்வின் நுட்பங்களையும், மனித உறவின் நுண்மைகளையும் சித்தரித்துக் காட்டுவதில் வல்லவை.

அம்மன் நெசவு இவரெழுதிய முதல் நாவலாகும்.இந்நாவல் நெசவாளர் குடிகளான தேவாங்கர் சமூகத்தினரின் இடப்பெயர்ச்சியைப் பற்றி பேசியது. தொன்மத்தில் தொடங்கினாலும் சமகாலம் வரையிலும் இந்நாவல் நீடிக்கிறது. நெசவுக் குடும்பப் பின்னணியில் பிறந்த எம். கோபாலகிருஷ்ணன் முதல் நாவலின் தொடர்ச்சியாய் தொழில்மயமாகி வந்த திருப்பூரின் பின்புலத்தில் வைத்து மனித வாழ்க்கையின் நுட்பமான மாற்றங்களை மணல் கடிகை என்ற நாவலாக அடுத்து எழுதினார். ஐந்து கணவன் மனைவிகள், ஐந்து வெவ்வேறு ஊர்கள் சார்ந்து நடக்கும் மாற்றங்களை தீவிரம் குன்றாமல் சித்தரிக்கிறது இந்நாவல். ஆண்-பெண் உறவின் நுட்பங்களை ஆழமாக சித்தரித்த நாவலாசிரியர்களில் முதன்மையானவராக சந்தேகமே இல்லாமல் எம்.கோபாலகிருஷ்ணன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார். மனைமாட்சி நாவல் அந்த விதத்தில் குறிப்பிடவேண்டிய படைப்பாகும். ஒருபடைப்பு வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தின் வழியாக ஒட்டுமொத்த வாழ்வைக் குறித்த உங்கள் பார்வைக்குக் கூடுதலான பரிமாணத்தைத் தரவல்லதாக இருக்க வேண்டும் என்றும், இதுவரைக்குமான உங்கள் பார்வையில் புதிய ஒரு கோணத்தைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிற அவர் அதற்கேற்ப எழுதியிருக்கும் படைப்புகளே இவை. அவருடைய சிறுகதைகளும் இதே பண்பு கொண்டவையோகும். வெவ்வேறு மொழிகளின் படைப்புகளை வாசித்த போது தமிழ்ப் படைப்புக்குலகின் வெற்றிடத்தை நிரப்பும் நோக்கத்துடன் அவர் மொழிபெயர்ப்புகள் அமைந்தன. ஆங்கிலத்திலிருந்து மட்டுமல்லாமல் இந்தியிலிருந்தும் தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். மேலும் இவர் ஜெயமோகனோடு இணைந்து செய்த நேர்காணல்களின் தொகுப்பும், ரேமண்ட் கார்வரின் சிறுகதை க.மோகனரங்கன் செங்கதிர் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து ஒரு தொகுப்பும் வெளியாகியிருக்கிறது. அதேபோல இலக்கிய அரங்குகளிலும், இலக்கிய இதழ்களிலும் மொழி பிரக்ஞையும் வாழ்வு நுட்பங்களையும் விவரித்துப் பேசுகிற இலக்கிய விமர்சகராக வலம் வருகிறார். கதா(1999), ஸ்பாரோ(2021) உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.

படைப்புகள்
நாவல்கள்:
• அம்மன் நெசவு (2002)
• மணல்கடிகை (2004)
• மனைமாட்சி (2018)
• தீர்த்த யாத்திரை (2021)
• வேங்கைவனம் (2022)
குறுநாவல் தொகுப்புகள்:
• வால்வெள்ளி (2018)
• மாயப் புன்னகை (2020)
சிறுகதைத் தொகுப்புகள்:
• பிறிதொரு நதிக்கரை (2000, 2015)
• முனிமேடு (2007)
• சக்தியோகம் (2018)
• மல்லி (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்) (2019)
• அமைதி என்பது… (2022)
• சுழல் (2024)
கவிதைத் தொகுப்பு:
• குரல்களின் வேட்டை (2000)
கட்டுரைத் தொகுப்புகள்:
• நினைவில் நின்ற கவிதைகள் (2018)
• மொழி பூக்கும் நிலம் (2019)
• ஒரு கூடைத் தாழம்பூ (2019)
• தமிழ் நாவல்களின் தடம் (2024)
மொழிபெயர்ப்புகள்:
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு:
• ஈஷாவாஸ்ய உபநிஷத் – ஒரு அறிமுகம் (1999)
• ஒரு அடிமையின் வரலாறு – வாழ்க்கைச் சரிதம் – பிரடெரிக் டக்ளஸ் (2001)
• வாழ்விலே ஒரு நாள் – நாவல் – சோல்ஸெனிட்சன் (2003)
• காதலின் துயரம் – நாவல் – கதே (2006)
• அறிவு – நாராயண குருவின் பாடல்களுக்கான நித்ய சைதன்யயதியின் உரை, (2021)
• ஆன்டன் செகாவ் கதைகள் (2021)
இந்தியிலிருந்து தமிழுக்கு:
• சிவப்புத் தகரக் கூரை - (2013)
• துயர் நடுவே வாழ்வு - திகார் பெண் கைதிகளின் கவிதைகள் (2015)
• வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்யாயன் (2020)

நுண்கலை: ஓவியர் சந்ரு

விருது பெற்றோர் புகைப்படம்

வாழ்க்கைக் குறிப்பும் கலைப் பயணமும்
தமிழ் நவீன ஓவியக் கலைஞர்களில் மூத்தவரும், சென்னை ஓவியக்கலைக் கல்லூரியின் ஆசிரியரும் முன்னாள் முதல்வருமான திரு.சந்ரு சிறந்த சிற்பக் கலைஞர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் தலித் கலை இலக்கியச் செயல்பாட்டாளர். “சந்ரு மாஸ்டர்” என மாணவர்களால் அழைக்கப்பட்டுவரும் இவரது இயற்பெயர் சந்திரசேகரன் குருசாமி. “கலை என்பது விருதுகளுக்காக மட்டுமே உருவாக்கப்படுவதில்லை” என்பது இவர் கூற்று. குருவனம் என்ற திறந்தவெளி அருங்காட்சியகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் திருநெல்வேலி ஓவியப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனர். குருவனம் திறந்தவெளி அருங்காட்சியகத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுக்காக மார்பளவு சிலைகள் அமைத்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிற்பங்களைத் தனது அகக் கண் முன் கொணர்ந்து ஓவியமாக வரையக் கூடியவர். தொடர்ந்து கலை, இலக்கியம் சார்ந்த உரையாடல்களில் ஈடுபடுவதுடன் தனது மாணாக்கர்களையும் அவ்வழி நடத்தி வருபவர்.

1951ல் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த இவர் சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஐந்து வருடங்கள் வண்ணக்கலை (Painting) துறையில் இளம் கவின் கலை (B.F.A) பட்டமும் பின் ஆலையக சுடுமண் வடிவமைப்பு (Industrial Design in Ceramic) துறையில் முது கவின் கலை (M.F.A) பட்டமும் பெற்றவர்.

ஆரம்ப காலத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றிய இவர் பிறகு, 1977 முதல் சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஆலையக சுடுமண் வடிவமைப்பு துறையின் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் கல்லூரியின் முதல்வராகி ஓய்வு பெற்றார்.

முதன்முதலாகத் தன் ஓவியங்களை 1996-ல் மைலாப்பூரில் 'கலைக்கு எதிராக கலை' என்ற தலைப்பில் தனிக் கண்காட்சியாக வைத்தார். பின்னர் 2023 ஆண்டு கலை-அரசியல் (ART-POLITICS) என்ற தலைப்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தக்ஷிண்சித்ராவில் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

சென்னை மாநகரின் வட்டவடிவப் பாதைகளில் வைக்கப்பட்டுள்ள மரப்பாச்சி, தெருக்கூத்து, புலிவேடமிட்ட ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தொழிலாளர் பிரச்சினை ஆகிய சிலைகள் இவரால் வடிக்கப்பட்டவை. உச்ச நீதிமன்ற நீதிபதி பகவதியின் மார்பளவு சிலை, சித்தா ஆராய்ச்சி மையத்திலுள்ள அயோத்திதாச பண்டிதரின் மார்பளவு சிலை, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலுள்ள டாக்டர் ரமணன் மார்பளவு சிலை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலை, மதுரை உயர்நீதிமன்றத்திலுள்ள காந்தியின் உருவச் சிலை, திருநெல்வேலியில் உள்ள லெனின் சிலை, சென்னை வணிக வளாகத்தில் உள்ள தமிழரின் ஆதிக் கலாச்சாரத்தினை வரையறுக்கும் பெண்கள் அணியும் பாம்படம், நீலகிரியின் அடையாளமான வரையாடு போன்றவை இவரின் முக்கிய படைப்புகள்.

படைப்புகள்
சிறுகதைத் தொகுப்பு:
• அவன், இவன், வுவன்
கலை தொடர்பிலான புத்தகங்கள்:
• திருத்தப்பட்ட பதிப்பு (ஓவியம்)
• செப்பாடி தப்பாடி (தற்கால கலை குறித்த விமர்சன புத்தகம்)
• நேர்காணலும் நிறைகாணலும் (காவ்யா வெளியீடு)
• உருவெளியில் (நிர்வாண வரைபடங்களைப் பற்றிய புத்தகம்)
• ஓவியம் என்றொரு மேஜிக் - ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள்
• (ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள்)
• சாதி கெட்ட கலை (படிக வெளியீடு)
கவிதைத் தொகுப்பு:
• சரியும் மரத்திலிருந்து வெளியேறும் குருவிகள் (வம்சி பதிப்பகம்)
• சந்ருவின் கவிதை

விருதுகள்
• 1993-ல் கலாமேளாவில் சிறந்த மேடை வடிவமைப்புக்கான தேசிய அளவிலான விருது
• 1996-ல் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச பனி சிற்ப திருவிழாவில் இரண்டாம் பரிசு
• 1997-ல் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா மற்றும் வர்த்தக விழாவில் முதல் பரிசு
• சிறுகதை விருது - (என்.எல்.சி 2007) நெய்வேலி



2023

புனைவிலக்கியம்: கி விட்டல் ராவ்

விருது பெற்றோர் புகைப்படம்

நடுவர்கள் பரிந்துரை:
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் புனைவுலகிலும் எழுத்துலகிலும் செயல்பட்டுவரும் மூத்த படைப்பாளி. இடையறாத நம்பிக்கையுடன் தொடர்ந்து படைப்பாற்றலுடன் இயங்கிவருபவர். ஓவியர். கலை விமர்சகர். ஒன்பது நாவல்கள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நுண்கலைகள், உலகத் திரைப்படங்கள் குறித்த பல கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன. நம் பெருமிதத்துக்குரிய தமிழின் சிறந்த கலை இலக்கிய ஆளுமை.

வாழ்க்கைக் குறிப்பும் இலக்கியப் பணிகளும்:
சேலம் மாவட்டத்தோடு ஒசூர் நகரம் இணைந்திருந்த காலத்தில் 22.05.1942 அன்று விட்டல்ராவ் பிறந்தார். இவருடைய தந்தையார் கிருஷ்ணராவ். தாயார் சரஸ்வதி. சேலத்தில் பள்ளிப்படிப்பையும் சென்னையில் எக்ஸ்ரே பட்டயப்படிப்பையும் முடித்த பிறகு எக்ஸ்ரே டெக்னிஷியனாகவும் பள்ளியாசிரியராகவும் சேலம் ஈரோடு மின்சார நிறுவனத்தில் எழுத்தராகவும் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 1963இல் சென்னை தொலைபேசித் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். ஓவியக்கலையின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக மெட்ராஸ் கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கலை, இலக்கியத்திலும் அவருடைய ஆர்வம் வளர்ந்தது. 1967இல் அவருடைய முதல் சிறுகதை ஆனந்த விகடன் இதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து அமுதசுரபி, தினமணி கதிர், தீபம், கணையாழி, புதிய பார்வை, சுபமங்களா போன்ற இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். 1976இல் விட்டல்ராவ் எழுதிய ’போக்கிடம்’ என்னும் நாவல் கையெழுத்துப்பிரதியாகவே இலக்கியச்சிந்தனை நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்று வெளியானது. 1981இல் வெளிவந்த அவருடைய ’நதிமூலம்’ மிகச்சிறந்த தமிழ் நாவல் வரிசையில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. இதுவரை இவருடைய ஆக்கங்களாக பன்னிரண்டு நாவல்களும் ஐந்து குறுநாவல்களும் ஐந்து சிறுகதைத்தொகுதிகளும் பன்னிரண்டு கட்டுரைத்தொகுதிகளும் வெளிவந்துள்ளன. ’இந்த நூற்றாண்டின் சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் விட்டல்ராவ் உருவாக்கிய மூன்று தொகைநூல்கள், தமிழ்ச்சிறுகதையின் வளர்ச்சிப்போக்கை அறிய எண்ணும் வாசகர்களுக்குச் சிறந்த உறுதுணையாக விளங்குகின்றன. 2021இல் விட்டல்ராவ் எழுதிய ‘ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்’ புத்தகம் எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய சேலத்தைப்பற்றிய அனுபவச்சித்திரங்களைக் கொண்ட தொகுதியாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

விட்டல்ராவின் ’வாழ்வின் சில உன்னதங்கள்’ புத்தகம், சென்னை மூர்மார்க்கெட்டிலும் பிற பகுதிகளிலும் இருந்த பழைய புத்தகக்கடைகளைப் பற்றியும் அங்கே தேடித்தேடி எடுத்துப் படித்த பழைய அரிய நூல்களைப் பற்றியும் பல நினைவலைகளைக் கொண்ட புத்தகமாகும். அவருடைய ‘கலை இலக்கியச் சங்கதிகள்’ என்னும் புத்தகம் தமிழ் எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிற்பிகள் பற்றிய மிகச்சிறந்த ஆவணம். விட்டல்ராவ் எழுதிய ‘தமிழகக் கோட்டைகள்’ பயண அனுபவங்களையும் வரலாற்றுத்தகவல்களையும் இணைத்து எழுதப்பட்ட மிகச்சிறந்த புத்தகமாகும். 2018இல் வெளிவந்த அவருடைய ’நிலநடுக்கோடு’ விடுதலைக்குப் பிறகு வசித்த ஆங்கிலோ இந்திய மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கைச்சூழலைப் பதிவு செய்திருக்கும் ஆவணமாகும். வாழ்க்கைப்படிநிலையில் அவர்கள் மெல்ல மெல்ல சரிந்து உதிரி மனிதர்களாக உயிர்த்திருந்து மறைந்துவிடுகிறார்கள். ‘பேசும் புதிய சக்தி’ இதழில் விட்டல்ராவ் எழுதிவந்த ‘கலையும் காலமும்’ என்னும் கட்டுரைத்தொகுதியும் ‘புக் டே’ என்னும் இணையதளத்தில் எழுதிவந்த ‘பயாஸ்கோப்காரன்’ என்னும் கட்டுரைத்தொகுதியும் ‘நிழல்’ என்னும் இதழில் எழுதிவந்த ‘இந்திய சினிமா வரலாறு’ என்னும் கட்டுரைத்தொகுதியும் அவர் இதுவரை எழுதிய எல்லாச் சிறுகதைகளையும் கொண்ட ஒரு பெருந்தொகுதியும் இவ்வாண்டு இறுதிக்குள் நூல்வடிவம் பெறவிருக்கின்றன. 2002இல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற விட்டல்ராவ், 2009 முதல் பெங்களூரில் வசித்துவருகிறார்.

விட்டல் ராவ் எழுதிய நூல்கள்:

புதினங்கள்:
• இன்னொரு தாஜ்மகால் - 1974
• போக்கிடம் - 1976
• தூறல் - 1976
• நதிமூலம் - 1981
• மற்றவர்கள் - 1992
• மீண்டும் அவளுக்காக - 1993
• காலவெளி - 1993
• வண்ண முகங்கள் - 1994
• காம்ரேடுகள் – 1996
• 10. நிலநடுக்கோடு – 2018

சிறுகதை தொகுதிகள்:
• முத்துக்கள் பத்து - 2010
• மரம் வைத்தவன் - 2018
• வெளி மனிதன் - 2018
• விட்டல் ராவ் கதைகள் - 2019
• நெருக்கமான இடைவெளி

கட்டுரைத் தொகுதிகள்:
• தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் - 2013
• தமிழகக் கோட்டைகள் - 2010
• வாழ்வின் சில உன்னதங்கள் - 2011
• நவீன கன்னட சினிமா - 2011
• தி.ஜ.ர.வின் எழுத்தும் தேசிய உணர்வும்
• ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் - 2021
• பயாஸ்கோப்காரன் - சினிமா தொடர் (பிப்ரவரி 2021 முதல்)
• சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்
• நவீன கன்னட சினிமா
• ஓவியக் கலை உலகில்
• கலை இலக்கியச் சங்கதிகள்
• கூடார நாட்கள் - 2012

புனைவற்ற படைப்புகள்: வைதேகி ஹெர்பர்ட்

விருது பெற்றோர் புகைப்படம்

நடுவர்கள் பரிந்துரை:
பல்கலைக்கழகங்களில் கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அசாத்திய மொழிபெயர்ப்புப் பணியைத் தன் கடும் உழைப்பாலும் அயராத முயற்சியாலும் தனி ஒருவராக சாத்தியப்படுத்தியிருப்பவர் வைதேகி ஹெர்பெர்ட். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மகத்தான பணி இவருடையது. இவர் 18 சங்க இலக்கியத் தொகை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு அவற்றை வெளியிடவும் செய்தார். அவற்றை இணைய வழியில் வாசிக்கவும் வகை செய்திருக்கிறார். ரஷ்ய பேரிலக்கியங்களைத் தனியொரு பெண்மணியாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த கான்ஸ்டாண்டின் கார்னெட்டின் மகத்தான பணிக்கு இணையான அரும் பணி இது.

வாழ்க்கைக் குறிப்பும் எழுத்துப் பணிகளும்:
74 வயதாகும் திருமதி வைதேகி ஹெர்பர்ட் தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர். தற்பொழுது அமெரிக்காவின் ஹவாயி மாகாணத்தில் வாழ்பவர். 1977ம் ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். மறைந்த சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஏ.கே. ராமானுஜன் சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதியவற்றைப் படித்தபின் ஏற்பட்ட ஆர்வத்தில் தன் முயற்சியில் சங்க இலக்கியத்தை முழுமையாகக் கற்றவர். தான் கற்றதோடல்லாமல், தன்னைப் போன்று ஆங்கில வழியில் பள்ளிக்கல்வி கற்ற அனைவரும் சங்க இலக்கியத்தைக் கற்க வேண்டும் எனப் பாடல்களை மொழிபெயர்த்து சொல்லுக்குச்சொல் பொருள் கொடுத்து உரை நூலாக தன் மொழிபெயர்ப்புகளை உருவாக்கியுள்ளார். அவை அனைத்தையும் இணையத்தில் இலவசமாக வழங்கி யார் வேண்டுமானாலும் எடுத்துப் பயிலவும், பயன்படுத்தவும் வகை செய்துள்ளார். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்ச்சங்கங்களிலும், இணையத்திலும் எண்ணற்ற பயிலரங்குகளை இலவசமாக நட த்தி வருகிறார். இதுவரை மொத்தம் 47 நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய முதன்மையான தளம் மூலம் அவரது இதர 15 இணையதளங்களுக்கும் செல்லமுடியும்.

ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தமிழ் இருக்கை அமைக்க இவரை முதலில் அணுகி தமிழ்ப்புரவலர்களை தொடர்பு கொண்டனர். அதன் பின் இருக்கை அமைக்க நிதி திரட்டிய தமிழிருக்கைக் குழுமத்தின் ஆட்சிக்குழுவில் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், “கோலம்” தொண்டு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள பள்ளியில் ஏழை மாணவர்களுக்காக 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து உதவித்தொகை அளித்து வந்திருக்கிறார். சென்னையில் சங்கத்தமிழ் அறக்கட்டளை என்ற பெயரில் சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் பயிலும் மாணவர்களுக்கு உதவி வருகிறார்.

இவருக்கு 2012ல் கனடா இலக்கியத்தோட்டத்தின் மொழி பெயர்ப்பாளருக்கான இயல் விருதும், 2016ல் தமிழ்நாடு அரசின் ஜி.யு.போப் மொழி பெயர்ப்பு விருதும், 2024ல் தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் மொழி பெயர்ப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளன.

வைதேகி ஹெர்பர்ட் எழுதிய நூல்கள் (மொத்தம் 47)

அகராதி:
• சங்க இலக்கிய அகராதி - 1 (1200 பக்கங்கள் கொண்டது)
• பண்டைய இலக்கிய நூல்களின் மொழிபெயர்ப்பு (சொற்பொருளுடனும் குறிப்புகளுடனும், திருக்குறளைத் தவிர):
• சங்க நூல்கள் - 18
• பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்கள் - 6
• முத்தொள்ளாயிரம் - 1
• பாண்டிக்கோவை - 1
• மாணிக்கவாசகரின் திருக்கோவையார்- 1
• திருக்குறள் – 1

தமிழ் உரை:
• பத்துப்பாட்டு - 10
• குறுந்தொகை - 1
• புறநானூற்றுத் துளிகள் (பேரறிஞர் கு.வெ. பாலசுப்ரமணியன் உடன் எழுதியது) - 1
• காரைக்கால் அம்மையாரின் அற்புத திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் - 1

ஆங்கில நூல்கள்:
• Sangam Literature - A Beginners Guide - 1
• Indus Valley Civilization - Dravidian Civilization - 1 (with her student Krishnapriya)
• My Mentor Bharathiar - 1 (translated from Thamil - என் குருநாதர் பாரதியார்)

பிற நூல்கள்:
• தாகூரின் கீதாஞ்சலி - 1 (தமிழ் மொழிபெயர்ப்பு)
• தொல்காப்பியத் துளிகள் - 1 (மாணவி புவனாவுடன்; இந்நூல் தொல்காப்பியத்திற்கு ஓர் அறிமுக நூல்)



2022

புனைவிலக்கியம்: சு தமிழ்ச்செல்வி

புனைவற்ற படைப்புகள்: பொ வேல்சாமி


2021

புனைவற்ற படைப்புகள்: அஸ்வகோஷ்

விருது பெற்றோர் புகைப்படம்

2021ஆம் ஆண்டு, அ-புனைவிற்கான விளக்கு விருது பெறும் இராசேந்திர சோழன், அஸ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதியவர். சிறுகதை, குறுநாவல், நாடகம் எனப் புனைவுப் பாதையில் இவர் மேற்கொண்ட பயணம் பிரத்தியேகமானது. கம்யூனிச சித்தாந்த ஈடுபாடு கொண்ட இவருடைய எழுத்துகள், அவற்றின் அழகியல் வெளிப்பாடு காரணமாக, கலை சித்தாந்த ஈடுபாடு கொண்டவர்களாலும் கொண்டாடப்பட்டது.

அதேசமயம், இவருடைய அ-புனைவு எழுத்துகள் காலத்தின் தேவையறிந்து வெளிப்பட்டவை. அறிவை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடும் முனைப்போடும் எழுதப்பட்டவை. இவ்வகையில், கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உருவாக்கப்பட்டபோது இவர் எழுதிய, ‘அணுசக்தி மர்மம்: தெரிந்ததும் தெரியாததும்’; நவீன நாடகத்துக்கான அடிப்படை நூலாக எழுதிய, ‘அரங்க ஆட்டம்’; பின்நவீனத்துவம் தமிழில் அறிமுகமானபோது எழுதிய, ‘பின்நவீனத்துவம்: பித்தும் தெளிவும்’ ஆகிய நூல்கள் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானவை.

தீர்க்கமான சிந்தனையாளர் மட்டுமல்ல, களச் செயல்பாட்டிலும் அறிவை ஜனநாயகப்படுத்துவதன் அவசியம் குறித்த நம்பிக்கையோடு இயங்கியவர்.

இயற்பெயர்: இர இராசேந்திரசோழன்
புனைபெயர்: அஸ்வகோஷ்
மனைவி: ராஜகுமாரி
பிறந்த ஊர்: உளுந்தூர்ப்பேட்டை
கல்வித்தகுதி: ஆசிரியர் பயிற்சி
தொழில்: ஆசிரியர்

பணி புரிந்த பத்திரிகைகள்:
  1. பிரச்சனை
  2. உதயம்
  3. மண்மொழி
புனைவிலக்கியம்:
  1. இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
  2. சிறகுகள் முளைத்து
  3. பரிதாப எழுத்தாளர் பண்டித புராணம்
  4. இராசேந்திரசோழன் சிறுகதைகள்
  5. 21வது அம்சம்
  6. பதியம் நாவல்
  7. காவலர் இல்லம் நாவல்
  8. புற்றில் உறையும் பாம்புகள்
  9. சவாரி
நாடகங்கள்:
  1. தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள்
  2. மரியாதைராமன் மதிநுட்ப நாடகங்கள்
  3. அஸ்வகோஷ் நாடகங்கள்
  4. அரங்க ஆட்டம்
  5. நாளைவரும் வெள்ளம்
  6. விசாரணை
  7. வட்டங்கள்
  8. மீண்டும்வருகை
கட்டுரைகள்:
  1. ஐரோப்பிய இந்திய நாடகம்
  2. கருத்தியல் மதம் சாதி பெண்
  3. இயக்குதல் கோட்பாடு
  4. தமிழ் நாடகம் கட்டுரைகள்
  5. மண்மொழி மனிதம் நீதி
  6. மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி
  7. தமிழகம் தேசம் மொழி சாதி
  8. கருத்தியல் மதம் சாதி பெண்
  9. பெண்கள் சமூகம் மதிப்பீடுகள்
  10. மொழிக்கொள்கை
  11. சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமை
  12. இந்தியம் திராவிடம் தமிழ்த் தேசியம்
  13. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு – சில சிந்தனைகள்
  14. பகுத்தறிவின் மூடநம்பிக்கைகள்
  15. தலித்தியம் – நோக்கும் போக்கும்
  16. தமிழ்த்தேசமும் தன்னுரிமையும்
  17. தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும்
  18. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைதானா?
  19. பின்நவீனத்துவம் –பித்தும் தெளிவும்
  20. மார்க்சிய மெய்யியல், கடவுள் என்பது என்ன?(1995)
  21. சொர்க்கம் எங்கே இருக்கிறது? (2006)
  22. தமிழ்த் தேசியம் என்றால் என்ன?
  23. பொதுவுடைமையும் தமிழர்களும்
  24. அணுசக்தி மர்மம்
  25. அணு ஆற்றலும் மானுட வாழ்வும்
  26. அணுசக்திமர்மம் –அறிந்ததும் அறியாததும்
விருதுகள்:
  1. விஜயா வாசகர் வட்ட விருது (2020)
  2. புனைவிலக்கியத்துக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது (2021)

புனைவிலக்கியம்: வண்ணநிலவன்

விருது பெற்றோர் புகைப்படம்

2021ஆம் ஆண்டு, புனைவிற்கான விளக்கு விருது பெறும் வண்ணநிலவன், தமிழ் நவீன இலக்கியத்தில் ஆற்றல் மிக்க படைப்பு சக்தி,. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என எழுத்தின் பல்வேறு திசைகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். மனித குலத்துக்கான ஓர் ஒளியாகத் துலங்கும் எழுத்து இவருடையது.

1970க்குப் பின்னான நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில், தன் புனைவுகள் வழி, சில புதிய சாத்தியங்களைக். கண்டடைந்தவர். புனைவுக் கற்பனையின் சாத்தியங்களையும், படைப்புலகம் சார்ந்த உள்ளார்ந்த பயணத்தின் வழியாக மொழி வெளிப்பாட்டின் சாத்தியங்களையும் விஸ்தரித்தவர். இவருடைய ‘பாம்பும் பிடாரனும்’ சிறுகதைத் தொகுப்பு, தமிழ்ச் சிறுகதையை புதிய திசைக்கு இட்டுச் சென்றது. ‘கடல்புரத்தில்’, ‘கம்பாநதி’, ‘ரெயினீஸ் ஐயர் தெரு போன்ற நாவல்கள் தமிழ் நாவல் பரப்புக்கு வளம் சேர்த்தன. கலை நம்பிக்கையோடும் நேர்மையோடும் அமைந்த ஆரவாரமற்ற செயல்பாடுகள் மூலம் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வளமான பங்களிப்புகள் ஆற்றியிருப்பவர்.

இயற்பெயர்: ராமச்சந்திரன்
புனைபெயர்கள்: வண்ணநிலவன், துர்வாசர், சந்திரன்
தகப்பனார்: தா.மு.உலகநாதன்
தாயார்: ராமலெட்சுமி
மனைவி: சுப்புலெட்சுமி
மகன்: ஆனந்த்சங்கர்
மகள்கள்: சசி (எ) தனலெட்சுமி, உமா
பிறந்த ஊர்: திருநெல்வேலி
கல்வித் தகுதி: பள்ளி இறுதி வகுப்பு
தொழில்: எழுத்தாளர் / பத்திரிகையாளர்

பணிபுரிந்த பத்திரிகைகள்:
  1. கண்ணதாசன் (1973)
  2. புதுவைக்குரல் (1974)
  3. கணையாழி (1974)
  4. அன்னைநாடு (1975)
  5. துக்ளக் (1976-1990)
  6. சுபமங்களா (1993-1995)
  7. மீண்டும் துக்ளக் (1995 முதல்)
நாவல்கள்:
  1. நேசம் மறப்பதில்லை நெஞ்சம் (1976)
  2. கடல்புரத்தில் (1977)
  3. கம்பாநதி (1977)
  4. ரெயினீஸ் ஐயர் தெரு (1979)
  5. காலம் (2002)
  6. உள்ளும் புறமும் (2010)
  7. எம். எல் (2018)
சிறுகதைத் தொகுப்புகள்:
  1. எஸ்தர் (1976)
  2. பாம்பும் பிடாரனும் (1978)
  3. தர்மம் (1982)
  4. உள்ளும் புறமும் (1990)
  5. தேடித்தேடி (1990)
  6. தாமிரபரணிக் கதைகள் (1992)
  7. வண்ணநிலவன் கதைகள் (2012)
  8. மழைப்பயணம் (2019)
கவிதைத் தொகுப்புகள்:
  1. மெய்ப்பொருள் (1985)
  2. காலம் (1994)
கட்டுரைகள்:
  1. மறக்க முடியாத மனிதர்கள் (2012)
  2. பின் நகர்ந்த காலம் (2012)
  3. ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள் (2012)
  4. சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் (2014)
  5. பின்நகர்ந்த காலம் – இரண்டாம் பாகம் (2019)
  6. துர்வாசர் கட்டுரைகள் (2019)
  7. இவை தவிர இன்னும் தொகுக்கப்படாத முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள்
சினிமா அனுபவம்:
  1. ‘அவள் அப்படித்தான்' திரைப்பட வசனகர்த்தாக்கள் மூவரில் ஒருவர்.
பெற்ற விருதுகள்:
  1. இலக்கியச் சிந்தனை விருது (1977)
  2. தமிழக அரசு விருது (1983)
  3. ராமகிருஷ்ண ஜெய்தயாள் மனிதநேய விருது (1998)
  4. சாரல் விருது (2012)
  5. எஸ்.ஆர்.வி. விருது (2013)
  6. கவிஞர் வாலி விருது (2015)
  7. விஜயா வாசகர் வட்டத்தின் ஜெயகாந்தன் விருது (2017)
  8. பெரியசாமித்தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருது (2017)
  9. இலக்கியச் சிந்தனையின் பம்பாய் ஆதிலட்சுமணன் விருது (2018)
  10. கோயமுத்தூர் புத்தகத் திருவிழா வாழ்நாள் சாதனையாளர் விருது (2019)



2020

புனைவற்ற படைப்புகள்: ஸ்டாலின் ராஜாங்கம்

விருது பெற்றோர் புகைப்படம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகிலுள்ள முன்னூர் மங்கலம் ஊரில் 1980ல் ராஜாங்கம் காளியம்மாள் தாய் தந்தை. எளிய விவசாய குடும்பம். முதல் தலைமுறை பட்டதாரி.சொந்த ஊரின் அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்து ஆசிரியர் உதவியால் கல்லூரி படிப்பு.மதுரை செந்தமிழ்க் கல்லூரியிலும் அமெரிக்கன் கல்லூரியிலும் படித்த பின்னால் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இப்போது மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியர் பணி. பூர்ணிமா துணைவியார், புத்தமித்ரன், ஆதன் சித்தார்த் என்று இரு மகன்கள். அயோத்திதாசரின் மாற்றுக் கதையாடல்களும் தமிழ் இலக்கியங்களும் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

விமர்சனம், ஆய்வு ஆகிய மிக முக்கியமான துறைகளில் இளைஞர்களின் பங்கு ஒரு சிறிதும் இல்லாத காலத்தில் ஒரு அபூர்வமான, துடிப்பான இளம் ஆய்வாளராக ஸ்டாலின் ராஜாங்கம் 2000களில் எழுதத் தொடங்கினார். குடும்பத்தில் அம்பேத்கர் திராவிட இயக்கம் என்கிற அறிமுகத்தை பெற்றிருந்தாலும் கல்லூரி நாட்களில் இடதுசாரி அமைப்புகளிடம் நெருக்கம் கொண்டிருந்தார். தொண்ணூறுகளில் கிளைபரப்பி இருந்த தலித் இலக்கியம், தலித் திறனாய்வு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு எழுத தொடங்கினார். அவருடைய முதல் நூலான சனநாயகமற்ற சனநாயகம் ( ஜனவரி 2007) நூலில் இடம்பெற்றுள்ள அவரைப் பற்றிய அறிமுகக் குறிப்பில் 1990களில் உருவான தலித் எழுச்சியின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 13 மிக முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

இவரது தொகுப்பு நூல்கள் எதார்த்த பெளத்தம் (2012), அயோத்திதாசரும் சிங்காரவேலரும்: நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் (வெளிவராத விவாதங்கள், 2010) ஆகிய இரண்டு தொகுப்பு நூல்களுமே மிக முக்கியமானவை. இத்துடன் அழிந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களின் ஆதி அடையாளங்களைத் தேடி இவர் நடத்தி வரும் கள ஆய்வுகளும் அவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் ஒரு புதிய ஆய்வு முறையை தமிழில் புகுத்தியிருக்கிறது. மாற்று வரலாற்று ஆய்வு, மாற்று இலக்கிய ஆய்வு, மாற்றுக் கள ஆய்வு என இடைவிடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். ஒரு சில இளைஞர்கள் இவரது ஆய்வு முறைமைகளைக் கற்றுப் பின்பற்றி வருவதைக்கண்டு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

தீவிரமான அரசியல் விமர்சனக் கட்டுரையாளராக தொடங்கிய ஸ்டாலின், அதே சமயம் தலித் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் எழுதி வந்தார். தலித்துகளுக்கு பிறர் நடத்திய போராட்டங்களே இதுவரை எழுதப்பட்டு வந்திருக்கின்றனவே ஒழிய தலித்துகள் தங்களுக்காக நடத்தி வந்த போராட்டங்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற முறையில் அவருடைய வரலாறு குறித்த தொடக்க காலக் கட்டுரைகள் அமைந்திருப்பதை ‘வரலாற்றை மொழிதல்’ என்கிற நூல் வழியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஸ்டாலின் ராஜாங்கம் வரலாறு குறித்து எழுதுகையில் படிப்படியான வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது. அப்போதிருந்தே தேடிச் சென்று அறியப்படாத ஆளுமைகளை எழுதியிருக்கிறார். தேடல், புரிந்து கொள்ளல், எழுதுதல் என்பதன் வாயிலாகவே அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறார்.

இவற்றின் வாயிலாக ஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுத்து அடைந்த மாற்றங்கள் எவையென்றால்: வரலாறு என்பது ஆவணங்கள் சார்ந்ததோ, மொத்தத்துவப் பண்பு கொண்டதோ அல்ல. மாறாக அவை அந்தந்த வட்டாரங்களின் தனித்துவமான பண்புகளுடன் அமைந்தவை. அவற்றை அத்தகைய பண்புகளுடனேயே தொகுக்க வேண்டும். ஏறக்குறைய இது உள்ளூர் வரலாறு ஆகும். வரலாறு என்பதை விமர்சனப் பூர்வமாக எழுத வேண்டும் என்பதும் இருக்கிறது. ஒரு ஆளுமை, இயக்கம், போராட்டம் பற்றி எழுதும் போது அதில் நடந்த அர்ப்பணிப்பு, தொடர்ச்சி, தோல்வி, சமரசம் ஆகியவற்றையும் பதிவு செய்கிறார்.

இந்த வகையில் ஸ்டாலினின் எழுத்து சிறியவற்றின் பக்கம் நிற்கிறது. சிறுசிறு இயக்கங்கள், அறியப்படாமலே போன உள்ளூர் ஆளுமைகள், வரலாற்றிற்குள் வராத போராட்டங்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். இதனை எழுதாக் கிளவி நூலில் பார்க்க முடியும்.

வரலாற்றிற்குள் வராத பதிவுகள் என்ற முறையில் இவர் அதிகம் செல்லுவது கள ஆய்வை நோக்கி. அங்கு இவர் பெயர் சூடல், சிறு கடிதம், பிரசுரங்கள், மக்கள் நினைவுகள், சிலை, பாடல்கள் ஆகியவற்றை சேகரித்து ஒருவரைப் பற்றிய புரிதலை உண்டாக்குகிறார். வஞ்சி நகரம் என்கிற கிராமத்தில் சாதி ஆதிக்கத்திற்காக போராடி இறந்து போன கந்தன் என்பவரை நடுகல் போல மக்கள் பராமரிக்கிறார்கள். கந்தன் உயிரோடு இருந்த போது எழுதிய டைரி பதிவுகள், அரசுக்கு தந்த விண்ணப்பங்கள் ஆகியவற்றைத் திரட்டி அவர் பற்றி வஞ்சிநகரம் கந்தன் என்னும் சிறு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் ஸ்டாலின். அதேபோல அம்பேத்கரின் கடிதத்தில் இடம்பெற்ற ஒரு பெயரிலிருந்து தொடங்கி உள்ளூர் முதியவர்களின் நினைவு வரை சென்று காந்தியவாதியான ஆனந்த தீர்த்தர் என்பவர் பற்றி எழுதியிருக்கிறார்.

அவருக்கென கருத்தியல்கள் இருப்பினும் தன்னுடைய கருத்தியலை அளவுக்கோலாகக் கொண்டு மட்டுமே வரலாற்றின் மீது அவர் திணிப்பதில்லை. ஒரு தலைவர் இவ்வாறு தான் இருந்தார் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் மக்களிடம் அந்த வரலாறு மிகையாகவோ, குறையாகவோ இருக்கிறது எனில் ஸ்டாலின் வரலாற்றை சொல்லி விடுகிறார். அதற்காக மக்களைக் குறைசொல்வதில்லை. மாறாக மக்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதை சமூக, அரசியல், உளவியல் பின்னணியோடு விளக்க முயற்சிக்கிறார். இதை அவருடைய மிகப்பெரிய பலமாகக் கருத வேண்டும்.

இவ்வாறு மக்களிடமிருந்து தரவுகளை சேகரிக்கச் செல்கையில் மக்களிடம் தரவுகள் வெளிப்படையாக இல்லாமல் கதை, நினைவுகள் என்று பண்பாட்டு அடையாளங்களில் இருப்பதால் பண்பாட்டு நிலையிலும் இயங்க வேண்டி வருகிறது. இந்த இடத்தில் தான் ஸ்டாலின் ராஜாங்கத்தின் அயோத்திதாசர் பற்றிய வாசிப்பு வந்து முக்கியத்துவம் பெற்று விடுகிறது. அயோத்திதாசர் பற்றி அயோத்திதாசர்: வாழும் பெளத்தம், பெயரழிந்த வரலாறு, வைத்தியர் அயோத்திதாசர் ஆகிய மூன்று நூல்களும் மிக முக்கியமானவை. நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம்: வெளிவராத விவாதங்கள் - அயோத்திதாசரும் சிங்காரவேலரும் என்கிற தொகுப்பும் அவ்வாறே இவரது ஆய்வுப்போக்கைப் பூர்த்தி செய்கிறது.

அயோத்திதாசர் ஆய்வில் இரண்டு பணிகளை மேற்கொள்கிறார். ஒன்று அயோத்திதாசரைப் புரிந்து கொள்வது / விளக்குவது. இரண்டாவதாக அயோத்திதாசர் என்னும் மனிதரை விடுத்து அவரின் சிந்தனையை எடுத்துக் கொண்டு விவாதிப்பது.இதன்படி அயோத்திதாசர் மூலம் ஆய்வுச் சட்டகம் அல்லது ஆய்வு முறைமை என்கிற ஒன்றை அவர் தனியே எடுத்து வைக்கிறார். அந்த முறையியலைக் கையாண்டு வரலாற்றை, சமூக நடைமுறைகளை விளங்கிக் கொள்ள முடியும் என்கிறார். ஏற்கனவே இருக்கக் கூடிய முறையியல்கள் மூலம் பண்பாடு பற்றி இதுவரை கிடைத்திராத புதிய புரிதல்கள் கிடைக்கின்றன. இந்த முறையியல் படி அவர் மேற்கொள்ளும் கள ஆய்வுகளிலிருந்து தமிழக வரலாறு பற்றி சில வியப்பூட்டும் செய்திகள் கிடைக்கின்றன. தலை வெட்டப்பட்ட புத்தர் சிலைகள், உள்ளுர் தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகள் பற்றி அவர் எழுதியிருப்பவற்றை இதற்கான உதாரணமாகக் கூறலாம். இதன் மூலம் தலித் பிம்பமாக அறியப்பட்ட அயோத்திதாசர் இயல்பாகவே தமிழ் பண்பாட்டு சிந்தனையாளராக மாறிப் போகிறார்.

இந்த வகையில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய பெயரழிந்த வரலாறு என்கிற நூல் முக்கியமான ஒன்று. இந்நூல் ஒரேவேளையில் அயோத்திதாசர் பற்றிய நூலாகவும் மறுநிலையில் குறிப்பிட்ட காலக்கட்ட தமிழக வரலாற்றைப் பற்றிய நூலாகவும் அமைந்திருக்கிறது. அதாவது அயோத்திதாசரின் முறையியலை எடுத்துக் கொண்டு அவர் வரலாற்றின் மூலம் விளங்கிக் கொண்ட பகுதிகளை விளக்குவதாகவும், தமிழ் மரபில் ஆய்வு அணுகுமுறை எவ்வாறு இருந்து வந்திருக்கின்றன என்பன பற்றிய அழுத்தமான கேள்விகளை எழுப்புவதாகவும் இருக்கின்றன. குறிப்பாக உ.வே.சா.வும் அயோத்திதாசரும் பற்றிய கட்டுரையில் ஐரோப்பிய ஆய்வு முறையியலின் வரையறை பற்றியும், ஒவ்வொருவருடைய வாசிப்பில் 'தான் ' என்பது கலப்பது - கலக்காதது பற்றிய பிரச்சினை குறித்தும் விவாதித்திருப்பது முக்கியமான பதிவாக அமைந்துவிட்டது.

நவீன வாசிப்பில் அயோத்திதாசர் ஏன் புனைகதையாளர் போல் பார்க்கப்படுகிறார் என்பதை விளக்கும் போது எழுத்து சார் பிரதிகள் - பதிப்பு அரசியல் - அவற்றை வைத்து எழுதப்பட்ட வரலாறு போன்றவற்றின் வழியாக நவீனத்துவம் உருவாக்கிய நினைவு எது? மறதி எது ? என்கிற பார்வையை முன்வைக்கிறார். இந்நூலைப் பார்க்கும் போது அயோத்திதாசர் என்பவர் தந்த புரிதலைப் பயன்படுத்திக் கொண்டு – சாட்சியமாகக் கொண்டு தமிழ்த் தன்மை கொண்ட ஆய்வு முறையியல் ஒன்றை சமைக்க முயற்சிக்கிறார் எனலாம். ஒரு சிந்தனையாளர் நூறு ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்படுகிறார் என்றால், அவர் நூல்களை வைத்து விரிந்த வாசிப்பும், அதன் வழி புதிய புரிதல்களையும் விவாதங்களையும் உருவாக்க வேண்டும். அதனை ஸ்டாலின் செய்திருக்கிறார். அடித்தள சமூகக் குழுக்களிலிருந்து உருவாகி வரும் அறிவுக்குழுவுக்கான குரலாகவும் இதனைக் கொள்ளலாம். வரலாற்றை மாற்றி எழுதுவது என்பது வரலாற்றில் புதிய தகவலை கொணர்ந்து சேர்ப்பதில் இல்லை. மாறாக அதனை எழுதும் முறையியலில் இருக்கிறது என்பது ஸ்டாலின் ராஜாங்கம் பலமாக நம்புகிறார்.

அயோத்திதாசர் புகழ் பெற்ற சித்த வைத்தியராக இருந்தார் என்கிற தகவலை எடுத்துக் கொண்டு வைத்தியர் அயோத்திதாசர் என்கிற புதிய கோணத்திலான நூலை எழுதியிருக்கிறார். வைத்தியம் பார்த்தல், வைத்தியர் என்பவை நம்முடைய செவ்விலக்கியங்களில், மக்கள் நம்பிக்கைகளில் வழிபாடாக - விவாதமாக இருந்து வந்ததைப் பதிவு செய்கிறார். நோய் , வைத்தியம் என்கிற எதிர்மறையில் வைத்து தமிழ் பண்பாட்டு வரலாறு எழுதப்பட்டுள்ளது.

அயோத்திதாசர் சாதியமைப்பு எவ்வாறு பரவி நிலைபெற்றது என்பதை சில படிநிலைகளாக விளக்கியிருப்பதை ஸ்டாலின் தன்னுடைய ‘அயோத்திதாசர் : வாழும் பெளத்தம்’ என்னும் நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார். சாதியை விட, அது ஏன் இந்தச் சமூகத்தில் நிலைபெற்றிருக்கிறது என்கிற காரணத்தை அறிவது முந்தைய கட்டுரைகளில் ஸ்டாலின் ராஜாங்கத்தால் விவாதிக்கப்பட்டிருக்கிறது (ஆணவக் கொலைகளின் காலம் நூலில்). இந்நிலையில் அயோத்திதாசரின் இந்த படிநிலைகளிலான விளக்கம் ஸ்டாலினுக்கு உதவுகிறது. அவர் அடிக்கடி சமூக உளவியல் என்கிற சொல்லைக் கட்டுரைகளில் கையாள்கிறார். அயோத்திதாசர் படிநிலைகளாக காட்டும் கூறுகள், சமூக உளவியலில் சாதியம் நிலை பெற்றதை, இன்னும் நிலவுவதைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அதனை ஸ்டாலின் இன்றைய நடைமுறைகளைப் புரிந்துக் கொண்டு விரிவாக்குகிறார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் விமர்சன இயலின் முக்கியமான பங்களிப்பு இது.

ஒரு கருத்து நிலைபெறுவதற்கான படிநிலைகளாக அயோத்திதாசர் கூறும் இந்த கூறுகளை தன்னுடைய திரைப்பட விமர்சனங்களில் விரிவாக எடுத்தாண்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் சினிமா விமர்சனங்கள் புதுமையாகத் தெரிவதற்கு இவையே காரணம். குறிப்பாக ஒரு கருத்தை அல்லது அடையாளத்தை திரும்பத் திரும்பச் சொல்லுவதால் சமூக உளவியலில் உருவாகும் நிலைபேறு பற்றி பேசியிருக்கிறார். சினிமா பற்றி மட்டுமல்லாமல் பொதுவெளியில் நிலவும் பிம்பங்கள், ஊடகங்கள் பற்றியும் எழுதி வந்திருக்கிறார். குறிப்பாக சினிமாவை சினிமாக்குள்ளிருந்தது அணுகும் விமர்சன முறையை விடவும், சினிமா பாடலாக - கதையாக - போஸ்டராக - பேனராக என்றெல்லாம் எவ்வாறு சமூகத் தளத்தில் பொருள் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று எழுதியிருப்பது தமிழில் புதிது (தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்). அண்மையில் எழுதிய ‘எண்பதுகளின் தமிழ் சினிமா’ நூலில் புதிய வாதம் ஒன்றை வைத்திருக்கிறார். அதாவது தமிழ் சினிமா தலித்துகளைப் புறக்கணித்தது என்பதற்கு மாறாக தலித் கதையாடல் என்பது எவ்வாறு தொடர்ந்து உள்மெய்யாகப் புழங்கி வந்திருக்கிறது என்று வாதிடுகிறார். கிராமப்புறத் தெய்வங்கள், அதனோடு தொடர்புடைய சமூகக் குழுக்கள், உள்ளூர் இசை மரபு, குடும்ப அமைப்புக்கு வெளியே உள்ள பெண்களின் கலை என்று விவரிக்கப்படுகிறது. வெகுஜன சினிமா வணிக விதிகளின்படியே இயங்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் வேளையில் சமூக இயங்குமுறைக்கும் அதற்கும் உள்ள உறவு சினிமாவில் எவ்வாறு ஊடாடியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதனாலேயே ‘திரைப்படக் கதையாடல்களினூடான தமிழக சமூக வரலாறு’ என்று நூலுக்கு துணைத் தலைப்பும் இட்டிருக்கிறார்.

ஸ்டாலின் நூல்களை எழுதியிருப்பதோடு முக்கியமான நூல்களை பதிப்பித்திருக்கிறார். அவற்றுள் ஒன்று 1978 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த வன்முறையில் 12 தலித்துகள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய நூலும், இரட்டை மலை சீனிவாசனின் சுய சரிதை நூலும் முக்கியமானவை. பதிப்புகளே ஆனாலும் கள ஆய்வு மூலம் திரட்டப்பட்ட தகவல்களைச் சேர்ந்தே பதிப்பித்திருக்கிறார்.

ஜெயமோகன் எழுதுகிறார்: “ஸ்டாலின் ராஜாங்கத்தின் “எழுதாக்கிளவி வழிமறிக்கும் வரலாற்று ஆவணங்கள்” என்னும் நூலை கையிலெடுத்தபோது படித்து முடிக்க குறைந்தது ஒருவாரம் ஆகும் என்று நினைத்தேன். அதன் தலைப்பு உருவாக்கிய சித்திரம் அது. அன்று மத்தியானத்திற்குள் அந்த நூலை படித்து முடித்தபோது ஒரு வியப்பு ஏற்பட்டது. சென்ற பல ஆண்டுகளில் ஒரு கட்டுரை நூலை இத்தனை ஆர்வத்துடன் நான் படித்ததில்லை.” மேலும் “ஸ்டாலின் ராஜாங்கத்தின் இந்நூல் முழுக்க மறுதரப்பையும் கருத்தில் கொள்ளும் நிதானமும், எவரையும் புண்படுத்தும் அல்லது சீண்டும் நோக்கமற்ற முதிர்ச்சியும், அதேசமயம் தன் தரப்பை வலுவாக முன் வைக்கும் அறப்பற்றும் செயல்படுகின்றன. ஐயமே இன்றி இந்த தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்று ஸ்டாலின் ராஜாங்கத்தை இந்நூலை மட்டுமே ஆதாரமாக்கிச் சொல்ல முடியும்... நேரடியான களச்செயல்பாடுகளிலிருந்து கிடைத்த ஒரு அனுபவத்தை, ஒரு திறப்பை முதலில் புனைவுக்குரிய ஒருமையுடன் விவரிக்கிறார். அதிலிருந்து ஒரு சமூக எதார்த்தத்தை நோக்கியோ ஒரு அரசியல் கருத்தை நோக்கியோ விரிந்து செல்கிறார். இது புனைவிலக்கியத்தின் கட்டமைப்பை கட்டுரைகளுக்கு வழங்குகிறது. வாசகனின் ஆர்வம் தூண்டப்பட்டு வெவ்வேறு கோணங்களில் அவனுடைய சிந்தனை விரித்து எடுத்துக் கொண்டு செல்லப்படுகிறது.”

“தங்கள் வாழ்வுரிமைப் போரில் மாண்டவர்களும் , தலைமைதாங்கியவர்களும் அடித்தள மக்களின் நினைவில் எப்படியெல்லாம் நிலைநிறுத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கிச் செல்கிறது. சிந்து முதலிய பாடல்கள், வாய்மொழியாக உலவும் அனுபவக் கதைகள், முதியவர்களின் நினைவுகள், குழந்தைகளுக்குப் பெயர்கள், அரிதாகச் சிலைகள் என அந்நினைவுப்பேணல் பலமுகம் கொள்கிறது. போராட்டநினைவுகளை பேணிக்கொள்வதே ஒருவகை போராட்டம். அது போராட்டத்திற்கான உணர்வுக்குவியம்... ஒவ்வொரு கட்டுரையிலும் முன் முடிவுகள் இல்லாத ஒரு பயணம் நிகழ்வதனால் பிற தலித் எழுத்தாளர்களின் கட்டுரைகளில் இருக்கும் குறுகிய அரசியலை இத்தொகுதியில் பார்க்க முடியாது. அதாவது அரசியல் வழியாக இந்த களயதார்த்தங்களை ஸ்டாலின் பார்க்கவில்லை, மாறாக கள யதார்த்தம் வழியாக ஓர் அரசியலை வந்தடைகிறார்.... தெளிவான ஆதாரங்களுடன் வரலாற்று இயக்கத்தை புரிந்துகொண்டு கல்வியாளனின் நிதானத்துடன் அந்த தரப்பை முன்வைக்கிறார். ஆகவே அவற்றின் கனமும் விசையும் மேலும் அதிகமாகிறது”

இந்த நூலை ஒரு வகை வீரகதைப்பாடலென்று சொல்ல தயங்கமாட்டேன். சென்ற கால லட்சியவாதத்தின் முன் ஸ்டாலின் ராஜாங்கம் சென்று நிற்கிறார். சமகால அரசியலில் லட்சியவாதத்தை விட நடைமுறை நோக்கும் அடக்கத்தை விட ஆர்ர்ப்பாட்டமும் அர்ப்பணிப்பைவிட தந்திரங்களும் முக்கியத்துவம் பெறும் சூழலில் பெரும் கனவுகள் நிகழ்ந்த சென்ற காலத்தை நோக்கிச் செல்லும் ராஜாங்கத்தின் உள்ளம் செல்வதை என்னால் மிக அணுக்கமாகப் புரிந்துகொள்ள முடிவதாக இருக்கிறது. நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் எழுந்து வரும் சென்றகாலத்து மாமனிதர்கள் ஒவ்வொருவரின் முன்னாலும் நின்று பணிந்துதான் மேலே சென்றேன். கவிஞனின் பணி என்பது தன்னை எழுதுவது மட்டுமல்ல தன்னை விடப்பெரியவற்றின் முன் சென்று நின்று தன்னை இழப்பதும் கூடத்தான். வரலாற்று ஆசிரியனின் பணியும் அதுவே. வரலாற்றை மாமனிதர்களினூடாக வாசிக்கப்புகுந்த நூல் என்று இதைச்சொல்லலாம். இந்நூல் அளிக்கும் ஆளுமைச்சித்திரங்களுக்காகவே இதை ஒரு இலக்கிய சாதனை என்றும் தயங்காமல் சொல்வேன்.”

மிகப் புதிய ஆய்வுமுறைகள் மூலம் மாற்று வரலாற்றையும் மாற்றுப் பண்பாட்டையும் தலித்துகளுக்காக பெரும் ஆதாரங்களுடன் நிறுவியதையும் மேலும் பல ஆழமான ஆய்வுகளை முன்னெடுத்தும் செல்லும் ஒருவரான, “ஐயமே இன்றி இந்தத் தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்” என்று ஜெயமோகனால் பாராட்டப்படும் ஸ்டாலின் ராஜாங்கத்தைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

நூல்கள்:
  1. சனநாயகமற்ற சனநாயகம் (ஜனவரி 2007).
  2. தீண்டப்படாத நூல்கள்: ஒளிபடா உலகம் (டிசம்பர் 2007).
  3. ஆரிய உதடும் உனது, திராவிட உதடும் உனது (ஜனவரி 2008).
  4. வரலாற்றை மொழிதல்.
  5. தீராதியாகம் (அக்டோபர் 2010).
  6. சாதியம்: கைகூடாத நீதி (டிசம்பர், 2011).
  7. அயோத்திதாசர்: வாழும் பெளத்தம் (மே 2016).
  8. எழுதாக் கிளவி (வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்,ஏப்ரல் 2017).
  9. தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம் (ஜூன் 2016).
  10. ஆணவக் கொலைகளின் காலம் (செப்டம்பர் 2016).
  11. பெயரழிந்த வரலாறு (அயோத்திதாசரும் அவர் கால ஆளுமைகளும், டிசம்பர், 2019).
  12. எண்பதுகளின் சினிமா ( டிசம்பர் 2009).
  13. வைத்தியர் அயோத்திதாசர் (பிப்ரவரி 2021).
பதிப்புகள்:
  1. ஜி. அப்பாதுரையார் எழுதிய புத்தர் அருளறம்.
  2. விழுப்புரம் படுகொலை 1982 (ஆகஸ்ட் 2012).
தொகுப்பு:
  1. எதார்த்த பெளத்தம் (தொகுப்பாசிரியர், டிசம்பர், 2012).
  2. அயோத்திதாசரும் சிங்காரவேலரும்: நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் (வெளிவராத விவாதங்கள், அக்டோபர் 2010)
சிறு வெளியீடுகள்:
  1. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித்துகளின் பதிப்புப் பணிகள்.
  2. விண்ணப்பம் சொல்லும் விடுதலை (அயோத்திதாசரின் 3 ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு).
  3. வஞ்சிநகரம் கந்தன் (மே 2008).
கூட்டு நூல்:
  1. சாதி இன்று.
விருதுகள்:
  1. ஸ்பாரோ லிட்ரரி விருது 2017.
எதிர்கால திட்டங்கள்:
  1. நமது வரலாற்றில் சொல்லப்படாத,அழுத்தம் தரப்படாத - மறைந்திருக்கும் அவைதீக கூறுகளை, ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் நூல்களிலிருந்து அல்லாமல் மக்கள் வாழ்விலிருந்தும், மறு விளக்கங்கள் தந்தும் தமிழ் பண்பாட்டு வரலாறு எழுதுவது.
  2. பதிவு செய்யப்படாத தலித் செயற்பாடுகள் - ஆளுமைகள் பற்றி தொடர்ந்து எழுதி வருவதை ஒட்டி ஒரு நூற்றாண்டுக்கான தலித் அரசியல் வரலாற்றை விமர்சனபூர்வமாக எழுதுவது.

புனைவிலக்கியம்: சுகிர்தராணி

விருது பெற்றோர் புகைப்படம்

கவிஞர் சுகிர்தராணி இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்திற்கு அருகில் உள்ள இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் 1973ல் பிறந்தவர். தாய் -தவமணி, தந்தை -சண்முகம். தந்தை இரணிப்பேட்டையில் உள்ள EID Parry நிறுவனத்தில் பணி புரிந்தவர். சுகிர்தராணி 1-10 வகுப்புவரை இலாலாப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்தவர். 11 -12 வகுப்புகளை இராணிப்பேட்டையில் படித்தார். பின்னர் இராணிப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். பிற படிப்புகள்: எம் ஏ- தமிழ் இலக்கியம், எம்.ஏ- பொருளாதாரம், பி.எட்- தமிழ்.

தற்போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கவிஞர் சுகிர்தராணி 1990களின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறார். இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் இவரது ஏழாவது கவிதைத் தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. ஆறாவது தொகுப்பு வரையிலான மொத்தத் தொகுப்பும் “சூடிய பூ சூடுக” என்ற தலைப்பில் தயாராகி வருகிறது.

1990க்குப் பிறகான தமிழ்க் கவிதை இளம் கவிகளுக்கு புதிய சிறகுகளை வழங்கியது. ஆனால் தமிழ் பாரம்பர்ய சங்க காலம், சங்கம் மருசிய காலம், காப்பியக் காலம், பக்தி எழுச்சியின் காலம் ஆகிய தமிழின் சிறப்பான கவித்துவங்களை உள்வாங்கிக் கொண்ட ஒரு பெரிய இளம் கவிகளிகளின் பட்டாளமே உருவாகியது. தமிழின் திணை மரபு மிட்ட்கப்பட்டது. செழிப்பான தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் அழகுச் சொற்களில் தங்கள் புதிய தவிப்புகளை, ஏக்கங்களைக் கனவுகளைப் பதிவு செய்தார்கள். உலகமயமாக்கலின் தொடக்க கால அரசியலையும் உள்வாங்கி எழுதினார்கள் என்பதுதான் சிறப்பு. இவர்களுடனே தங்களுடைய அசலான பெண்குரலைப் மீட்டெடுத்த பெண்கள் சிலரும் எழுத ஆரம்பித்ததுதான் தமிக் கவிதைப் புத்தெழுச்சியின் சிறப்பு எனக் கூறுவேன். இவர்கள் ஆண்டாளின் தொடர்ச்சியாக வீறுகொண்டு எழுந்து வந்தார்கள். ஒரு சமயத்தில் உள்ளடங்கிய குரலில் திடுக்கிட வைத்த சுகந்தி சுப்பிரமணியனின் கவிதைகள் மீட்கப்பட்டு மிகப்புதிய குரலில் கூரிய சொல்லாயுதங்களோடு வலிமையாகக் கிளம்பின.

சாதிக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து எழுதியும் செயல்பட்டு வருபவர்.. பெண்ணியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர்.. தலித் பெண்ணிய செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கி வருபவர்…பெண்களுக்கான இயங்குவெளி என்பது சமூகத்தாலும் ஆண்களாலும் வரையறுத்து வைக்கப்பட்டிருப்பதையும்,பெண்களின் உடல் என்பது ஆண்களின் அடக்குமுறைக்கும், பாலியல் அதிகாரத்திற்கும் களமாக இருப்பதையும் தன் படைப்புகள்மூலம் கேள்விக்குட்படுத்தி வருபவர்.

சுகிர்தராணி எழுதுகிறார்: “பெண் உடலரசியல் இயக்கம் 2000க்கு பிறகு தீவிரமடைந்திருந்தது. பாலினச் சமத்துவமின்மை, பெண்கள் மீதான கலாசாரப் பண்பாட்டு சமூக அழுத்தங்களை பூடகமாகச் சொல்லி ஆணாதிக்கத்தை இன்னும் வலுப்படுத்தாமல் கவிதை எனும் ஆயுதத்தை இன்னும் கூர்மையாக வைக்க வேண்டிய தேவை எழுந்தது. ஆனால் உடலரசியல் என்றாலே இங்கே காமத்தை எழுதுகிறார்கள் என்று தட்டையாகத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண் உடலைச் சிதைக்கும் மனப்பான்மை உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. பெண்ணுடைய உடல் போகத்திற்கானது அல்ல, அவள் உடலும் உள்ளமும் ஒருசேர விடுதலை அடைவதுதான் சமூக மாற்றத்திற்கான வழி என்பதால் இவற்றை வெளிப்படையாகப் பேச வேண்டிய தேவை எழுகிறது. சாதித் தூய்மை குடும்பத் தூய்மை அனைத்தும் பெண் உடலில் இருப்பதாக இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.” பெண்கள் தம் அதிகாரத்தை வென்றெடுக்க உடலரசியலை ஒரு கூர்மையான ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை உரக்கச் சொல்லி வருபவர், பெண்ணுடல் விடுதலை பெறாமல் பெண்விடுதலை சாத்தியமில்லை... பெண்விடுதலை அடையாமல் தலித் விடுதலை சாத்தியமில்லை என்பதை தன் கவிதைகளின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் சுகிர்தராணி, ஒரு தலித் கவிஞரும் கூட. தான் ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் இருக்கச்சொல்லி சமூகம் வற்புறுத்தியதாலேயே எழுத வந்தேன் என்றும் முகத்தில் அறைந்து கூறுகிறார்.

சுகிர்தராணி இதுவரை
  1. கைப்பற்றி என் கனவு கேள் (2002)
  2. இரவு மிருகம் (2004)
  3. அவளை மொழிபெயர்த்தல் (2006)
  4. தீண்டப்படாத முத்தம் (2010)
  5. காமத்திப்பூ (2012)
  6. இப்படிக்கு ஏவாள் (2015)
ஆகிய ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுருக்கிறார்.

இதில் முதல் கவிதைத் தொகுப்பில் ஒரு இளம் கவியின் மனவிகாசமாக விரிகிறது.
ஆண்டாள் போலத் தன்னைப் பாவித்துக்கொண்டு காதலின் ஏக்கம் பொங்கி வழியும் ரம்மியமானவை. காதலில், தனது அடையாளத்தை முன்னிறுத்துகிறார். தனது இருப்பையும் தனக்கான சுதந்திரத்தையும் முதன்மைப்படுத்தும் தொகுப்பு என்ற வகையில் முக்கியமானதாகிறது. ஏனெனில் தலித்தின் வாதைகளைப் பேசும் கவிதைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன. ‘கைப்பற்றி என் கனவு கேள்’ என்னும் கவிதையில், பின்னால் வரப்போகும் எல்லாக் கவிதைகளின் முத்திரைகளும் அடங்கியுள்ளன.

“. . . . . . . . .
துள்ளும் வலியும்
மின்னலென வெட்டும்
வேதனையும்
உச்சமாய் எகிற
உயிரை அசைத்து
இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணி விலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என் மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?”

விமர்சகர் ந.முருகேசபாண்டியன் எழுதுகிறார்: “சுகிர்தராணியின் அடுத்தடுத்த இரு தொகுப்புகளும் கருத்தியல் ரீதியிலும் வெளிப்பாட்டு நிலையிலும் தனித்து விளங்குகின்றன. சராசரிப் பெண்ணின் புனைவியல் மனோபாவத்திற்கும் ஏக்க உணர்வுகளுக்கும் மாற்றாகத் தீவிரமான பெண் முன்னிறுத்தப்படுகிறாள். மரபு வழிப்பட்ட காதல் பற்றிய புனைவினைச் சிதைத்து, உடல்களை மையப்படுத்தி ... பெண்ணுடல் இதுவரையிலும் மறைக்கப்பட்ட பெண் குல வரலாற்றை எழுதுவதற்கான ஆதாரமாகின்றது. தமிழ்ச் சமூகம் பன்னெடுங்காலமாக மர்மப்படுத்தியுள்ள உடலையும் விலக்காகக் கருதி ஒதுக்கப்பட்ட கற்பிதங்களையும் புனைவின் உச்சமாகக் கருதி மறைக்கப்பட்ட பாலுறுப்புகளையும் கட்டுடைக்கின்றன சுகிர்தராணியின் கவிதைகள். பெண்ணுடலை மையப்படுத்தி அவர் எழுதியுள்ள கவிதைகளில் பெண் அரசியல் பொதிந்துள்ளது. பெண்ணுடலை எப்படி வேண்டுமானாலும் உருமாற்றுவதற்கான சாத்தியப்பாடுகளை முன்னிறுத்தும் வரிகள் 'அவளை எழுதுதல்' என்ற கவிதையாக வடிவெடுத்துள்ளன. பிரக்ஞையில் எப்பொழுதும் பெண் என்ற உடல்ரீதியான மனஅழுத்தம் நசுக்குகையில், அதிலிருந்து வெளியேறி உடலை முன் வைத்து ஆண் மேலாதிக்கக் குரலை எதிர்ப்பது கவிதைகளில் நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. அது மரபு வழியில் உறைந்துகிடக்கும் ஆண் மனங்களில் பண்பாட்டு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது.... இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமுடைய தமிழ்ச் சூழலில் இந்நிலைக்கு எதிராகக் காமத்தை முன்னிறுத்திப் பாலியல் தொடர்பாகப் பெண்ணுடலை மறுவாசிப்புச் செய்திடும் சுகிர்தராணியின் கவிதைகள் தனித்த போக்குடையன.... கருத்து ரீதியில் பெண்ணுடலை வெறும் யோனியும் முலைகளுமாகக் குறுக்குவதும் நடைமுறையில் துய்க்கப் பட்ட உடல்களைத் தூக்கியெறிந்துவிட்டுப் போவதுமான ஆண் மைய நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிராகப் பெண்ணின் காம வேட்கையை முன்னிறுத்திப் பெண் விடுதலையை மையப்படுத்தும் கவிதைகள் தமிழுக்குப் புதியன. மேலும், பாலியல் மூலம் இயற்கையை அவதானிக்க முயல்வதும் பெண்ணுடலை அடையாளப்படுத்துவதும் கவிதைகளின் வழியே தொடர்ந்து முயலப்பட்டுள்ளது....” “இதுவரை ஆண் மூலம் தன்னையும் தன் உடலையும் தன் பாலியல் வேட்கையையும் கண்டறிவதாகக் கட்டமைக்கப்பட்டிருந்த பெண் பிம்பம் தகர்ந்துபோய், பெண் தனது சுயேச்சையான தேர்வின் மூலம் வீறுகொள்கிறாள். உடலைப் பேசுவதன் மூலம் உடல் அரசியலை முதன்மைப்படுத்தும் சுகிர்தராணியின் கவிதைகள், பெண்ணுக்கான அசலான கொண்டாட்டத்தினைச் சாத்தியப்படுத்தியுள்ளன. இவ்வடிப்படையில் பெண்ணின் சுயபுணர்ச்சி குறித்துப் பேசும் கவிதைகள் முக்கியமானவை. பண்பாடு என்ற நிலையில் பெண் தன்னுடைய காம உணர்வை வெளிப்படையாகக் கூறமாட்டாள் என்ற பொதுப்புத்தியைச் சிதைத்துப் பாலியல் தேவையை விடுதலைக்கான முன்மொழிவாகச் சித்திரிப்பது நவீன அறம் சார்ந்தது. சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு முக்கியமான அம்சம், தலித்திய நோக்கிலான சமூக விமர்சனமாகும். வைதீக சமயம் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துத் தீண்டாமையைக் கற்பித்திருப்பது, இந்திய சமூகத்தைப் பிடித்துள்ள பெரும்சாபக்கேடு. அதிலும் தலித்தாகப் பிறந்த பெண்ணின் பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் தலித் ஆணைவிடக் கூடுதலானவை. அவளுடைய உடலின் மீது கணவன் மட்டுமின்றி, ஆதிக்க சமுதாயமும் தொடர்ந்து வன்முறையைச் செலுத்துகின்றது. இன்னொரு புறம் பொருளியல் சுரண்டலின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. பால் ரீதியில் தலித் பெண்ணின் குரல் சமூக அடித்தளத்தில் பலவீனமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது.”

கவிஞர் சுகுமாரன் எழுதுகிறார்: “சுகிர்தராணியின் இந்தத் தொகுப்பு (தீண்டப்படாத முத்தம்) அவர்களை இன்னும் மிரட்சியடையச் செய்யலாம். உடல் தொடர்பான வலிகளை, வாதைகளை, ஆனந்தத்தை வேறு எந்தச் சொற்களால் குறிப்பிட முடியும்? பெண் கவிதைமொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று ஜூலியா கிறிஸ்தவா குறிப்பிடுகிறார். இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது. இதுவரை தன் உடல்மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்தரிப்பை உதறும் மறுப்பு. தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம். இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும்போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன.”

ஆண்மையக் கருத்தாக்கங்கள் தயாரித்து வந்த பெண் என்ற கருத்தாக்கப்படிமத்தை சுகிர்தராணியின் பெண்மொழியே நிராகரிக்கிறது. இந்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் நிபந்தனைகளையும் சலுகைகளையும் மறுக்கிறது. தனது உடலையும் தன்னையும் தனது பெண்ணிணத்தையும் விடுதலைப்படுத்தும் இவரது கவிதைகள் பிறப்பால் இழிவுபடுத்தப்படுவதற்கான “தலித்” என்னும் அநியாயமான ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலையாகி கொக்கரிக்கும் கவிதைகள் இந்தத் தொகுப்பில் மையக் கவிதைகள்.

“பெண்ணின் காமமும் காதலும் சித்தரிக்கப்படும் கவிதைகள். சுகிர்தராணியின் கவிதைகளைப் பொருத்தவரை காமமும் காதலும் ஒன்றுதான். அதன் ஆதாரம் உடலின் சமிக்ஞைகள்தாம். காமமோ காதலோ மனம் சார்ந்தது என்ற ரொமாண்டிக்கான கருத்தை இந்தக் கவிதைகள் உதாசீனப்படுத்துகின்றன; புறக்கணிக்கின்றன. ஒரு கவிதையின் மையப்பாத்திரம் தன்னைக் ‘காமத்தின் புராதனக் கோவில்’ என்றே சொல்லுகிறது. சுகிர்தராணியின் இரண்டாம் தொகுப்பான ‘இரவு மிருக’த்தில் ஒரு கவிதை இருக்கிறது. ‘உலகத்து மொழிகளின்/ அத்தனை அகராதிகளிலும்/ தேடித் தேடி/ கடைசியில் தெரிந்துகொண்டேன்/உன் பெயரில் காதலுக்கு/ நிகரான இன்னொரு சொல்லை.’ இந்த மென்மையான கற்பனைகளைப் புதிய தொகுப்பில் காண்பது அரிது. மூன்றாவது கூறு: இந்தக் கவிதைகளில் இடம்பெறும் இயற்கை. சமீப காலத்தில் அதிக அளவுக்கு மனித வயப்படுத்தப்பட்ட இயற்கை அல்லது இயற்கையை ஒட்டிச் சித்தரிக்கப்பட்ட மானுடக் கூறுகள்கொண்ட கவிதைகள் இவை என்று சொல்லலாம். மனித சரீரம் இயற்கையின் பகுதியாகவோ இயற்கையின் அம்சங்கள் மனித உடலின் விரிவாகவோ சித்தரிக்கப்படுகின்றன. ‘முதல் கூடலுக்கு முன் நிகழ்ந்தவை’ (பக் 39) என்ற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.” என்று கவிஞர் சுகுமாரன் மேலும் குறிப்பிடுகிறார்.

தமிழில் பெண் மையக் குரலை வலுவான குரலில் மரபார்ந்த சமூகத்தின் செவிட்டில் அறைந்து கதறும் சுகிர்தராணியின் கவிதைகள் வெறும் பிரச்சாரமாக நிற்காமல் மிகுந்த கவித்துவத்துடன் மிகப்புதிய அதிர்ச்சியூட்டும் படிமஙளாகவும் வெளிப்படுகின்றன. இன்று, இவரது கவிதைகள் உலகம் முழுவதும் பல மொழிகளிலும் சென்று சேர்ந்திருக்கின்றன. நவீன தமிழ் இலக்கியத்தை உலகம் கவனிக்கும் விதமாக நம்மைப் பெருமிதம்கொள்ள வைக்கும் கவிஞர் சுகிர்தராணியைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது’ நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

படைப்புகள்:
  1. கைப்பற்றி என் கனவு கேள் (2002)
  2. இரவு மிருகம் (2004)
  3. அவளை மொழிபெயர்த்தல் (2006)
  4. தீண்டப்படாத முத்தம் (2010)
  5. காமத்திப்பூ (2012)
  6. இப்படிக்கு ஏவாள் (2015)
டிசம்பர் 2021 ல் வெளியாகும் புதிய படைப்புகள்:
  1. நூலின் பெயர்: சூடிய பூ சூடுக (ஒன்றிலிருந்து 6 கவிதைத் தொகுப்பு வரை ஒரே நூலாக வருகிறது.)
  2. ஏழாவது கவிதைத் தொகுப்பு: இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
  3. எழுதிக்கொண்டிருக்கும் நாவல் முடியும் தருவாயில் உள்ளது.
விருதுகள்:
  1. தேவமகள் கவித்தூவி விருது 2002 -கோவை. (விருது ரூ 2000).
  2. பாவலர் எழுஞாயிறு விருது, சேலம். (விருது ரூ 5000).
  3. சாதனைப் பெண் விருது, பெண்கள் முன்னணி - எழுத்தாளர் சிவகாமி IAS அமைப்பு.
  4. புதுமைப் பித்தன் நினைவு விருது – காலச்சுவடு.
  5. அம்பேத்கர் பேரொளி விருது, அம்பேத்கர் 125 வது ஆண்டு நிறைவு விழா, தலித் பண்பாட்டுக் கூடல், சென்னை.
  6. The Vibrant Voice Of Subalterns Award, 2018, திருவள்ளுவர் பல்கலைக் கழகம், வேலூர். விருது ரூ.10,000.
  7. குத்தூசி குருசாமி நினைவு விருது - இப்படிக்கு ஏவாள், கோவை.
  8. அன்னை மீனாம்பாள் சிவராஜ் விருது, இந்தியக் குடியரசுக் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு.
  9. அவ்வை விருது, மீறல் இலக்கியக் கழகம், புதுச்சேரி. விருது ரூ 10,000.
  10. எழுத்துச் செம்மல் விருது, அம்பேத்கர் இலக்கியக் கழகம், சென்னை.
  11. சுந்தர ராமசாமி விருது, நெய்தல் இலக்கிய அமைப்பு, நாகர்கோயில்.
  12. காரைக்கால் அம்மையார் விருது, பன்னாட்டு பெண்கள் அமைப்பு,சென்னை.
சிறப்புகள்:
  1. ஜெர்மனி அரசின் கலை பண்பாட்டுத் துறை மூலம் ஜெர்மனி நாட்டுக்கு அழைக்கப்பட்டு கவிதை வாசிப்பு, கவிதை குறித்த உரையாடல் நிகழ்ந்தது. பெர்லின், ஹம்பர்க், ஸ்டுட்கார்ட், லியோன்பெர்க் ஆகிய நகரங்கள். முதல் வெளிநாட்டு விமானப் பயணம். 2016.
  2. வட அமரிக்க தமிழ்ச்சங்க பேரவை - சிறப்பு விருந்தினர். 2017, மினியாபொலிஸ்.கனடா - ஒண்டாரியோவில் கவிதை வாசிப்பு. உரையாடல் கேரி, சார்லட், சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன் டிசி, ஆகிய இடங்களில் இலக்கியம், என் படைப்புகள் குறித்து உரையாடல்.
  3. சிங்கப்பூர் 2018- வாசகர் வட்டம் சார்பாக நூல் வெளியீடு மற்றும் உரையாடல்.
  4. மலேசியா - 2018 கோலாலம்பூர்,ஈப்போவில் இலக்கிய நிகழ்வுகள்.
  5. இலங்கை - மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பு.
  6. குவைத் - வானம்பாடி கவிஞர்கள் சங்கம் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைப்பு.
மேலும் சிறப்புகள்:
  1. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் பல பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இவருடைய கவிதைகள் இலக்கியத் துறைகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
  2. பல ஆய்வு மாணவர்கள் இவருடைய கவிதைகளை ஆய்வு செய்து முனைவர் மற்றும் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். இப்போதும் ஆய்வு செய்து வருகின்றனர்.
  3. டெல்லிப் பல்கலைக் கழகத்தில் மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டு உலக அளவில் பெரும் சர்ச்சையானது. பல எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் குரல் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சட்டமன்றத்தில் அறிக்கை வெளியிட்டார்.
  4. இத்தாலியில் நிரந்தர கவிதைக் கண்காட்சியகத்தில் என் கவிதை ஒன்று இத்தாலி மொழிபெயர்க்கப்பட்டு, தமிழில் என் கையெழுத்தில் எழுதிய அந்தக் கவிதையும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
  5. உலகின் புகழ்பெற்ற இடதுசாரி பதிப்பகமான வெர்சோ பதிப்பகம், உலகெங்கிலும் உள்ள பெண்ணியச் சிந்தனையாளர்கள்பற்றிக் கொண்டு வந்திருக்கும் The Verso Book Of Feminism 'Revolutionary words From Four Millennia Of Rebellion' என்னும் நானூறு பக்க தொகுப்பில்' மெல்லிய புலால் நாற்றம் வீசும்' என்னும் என்னுடைய கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் என்னைப்பற்றிய சிறு குறிப்பும் இடம்பெற்றுள்ளது. மொழிபெயர்ப்பாளர் மறைந்த லக்‌ஷ்மி ஹோம்ஸ்ட்ராம். இது உலக அளவில் தனது கவிதைக்கான மிகப்பெரிய அங்கீகாரம் என்று கருதுகிறார் கவிஞர் சுகிதராணி.
  6. இவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 'நதி என்பது என் பெயர்' என்னும் கவிதைத் தொகுப்பாக கடந்த வாரம் வெளியானது. இது மலையாள இலக்கிய உலகில் இவருக்கான அங்கீகாரம்.



2019

புனைவிலக்கியம்: கலாப்ரியா

புனைவற்ற படைப்புகள்: க பஞ்சாங்கம்


2018

புனைவிலக்கியம்: பாவண்ணன்

புனைவற்ற படைப்புகள்: ஆ சிவசுப்பிரமணியன்


2017

புனைவற்ற படைப்புகள்: ஆ இரா வேங்கடாசலபதி

புனைவிலக்கியம்: பா வெங்கடேசன்


2016

புனைவற்ற படைப்புகள்: ராஜ் கௌதமன்

புனைவிலக்கியம்: சமயவேல்


2015

என் கல்யாணராமன்


2014

சி மோகன்


2013

கோணங்கி


2012

பெருமாள் முருகன்


2011

எம் ஏ நுஃமான்


2010

தேவதச்சன்


2009

திலீப் குமார்


2008

விக்ரமாதித்யன்


2007

எஸ் வைதீஸ்வரன்


2006

தேவதேவன்


2005

அம்பை


2004

ஞானக்கூத்தன்


2003

சே ராமாநுஜம்


2002

சி மணி


2001

ஹெப்சிபா ஜேசுதாசன்


2000

பூமணி


1999

நகுலன்


1997

கோவை ஞானி


1996

பிரமிள்


1995

சி சு செல்லப்பா